×

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 323 பேருக்கு பணிநியமன ஆணை: எம்எல்ஏ, கலெக்டர் வழங்கினார்

 

ஆண்டிபட்டி, பிப். 11: தேனி மாவட்டத்தில் தொடர்ந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று கலைஞரின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில், ஆண்டிபட்டி தனியார் பொறியியல் கல்லூரியில் தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை கலெக்டர் ஷஜீவனா, எம்எல்ஏ மகாராஜன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இம்முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 89 தனியார் துறை வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர். வேலைவாய்ப்பு முகாமில் 323 பேருக்கு பணிநியமன ஆணைகளை கலெக்டர் ஷஜீவனா மற்றும் எம்எல்ஏ மகாராஜன் வழங்கினார்கள். முகாமில் 1037 வேலைநாடுனர்களும் 8 மாற்றுத்திறனாளிகளும் பதிவு செய்தனர். அவர்களில் 321 நபர்களுக்கும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2ம் கட்ட கலந்தாய்விற்கு 168 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 72 நபர்கள் திறன் பயிற்சி பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில், மகளிர் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 323 பேருக்கு பணிநியமன ஆணை: எம்எல்ஏ, கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Antipatti ,Theni ,administration ,Andipatti Private Engineering College ,
× RELATED ஆண்டிப்பட்டி மேகமலை அருவியில் திடீர்...